அ.கி.பரந்தாமனார்
பிறப்பு:
அ.கி.பரந்தாமனார் 1902, ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் கிருட்டிணசாமி சிவாக்கியானத்தின் நான்காவது மகனாகப் பிறந்தார்.
கல்வி:
சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் (செயின்ட் பால்) உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பணியிலிருந்து விடுப்புபெற்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இடைக்கலை (இடைநிலை) நிலையையும் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை (கலை இளங்கலை) பட்டத்தையும், 1949 ஆம் ஆண்டில் முதுகலை (மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ்) பட்டத்தையும் பெற்றார்.
பணி:
அ.கி.பரந்தாமனார் பள்ளிப் படிப்பினை முடித்ததும் ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1950 சனவரி 8 ஆம் நாள் மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
பாராட்டுகள்:
அ. கி. பரந்தாமனாருக்கு 60 ஆம் அகவை நிறைந்ததும் மதுரை திருவள்ளுவர் கழகம் அவருக்கு மணிவிழா கொண்டாடியது. அப்பொழுது மதுரை எழுத்தாளர் மன்றம் அவருக்குப் "பைந்தமிழ்ப் பாவலர்" என்னும் பட்டத்தை வழங்கியது. தஞ்சையில் 1981ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அவ்விழாவில் அ. கி. பரந்தாமனாருக்கு தமிழக அரசின் "திரு. வி. க. விருது" வழங்கப்பட்டது.
படைப்புகள்:
-
காதல்நிலைக் கவிதைகள் (1954)
-
எங்கள் தோட்டம் (1964) - சிறுவர் பாடல்
-
பரந்தாமனார் கவிதைகள்
-
கவிஞராக!
-
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
-
தமிழ் இலக்கியம் கற்க!
-
திருக்குறளும் புதுமைக் கருத்துக்களும் (1963)
-
பன்முகப் பார்வையாளன் பாரதி
-
பேச்சாளராக!
-
மதுரை நாயக்கர் வரலாறு
-
திருமலை நாயக்கர் வரலாறு
-
தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்
-
வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்
-
வாழ்க்கைக்கலை
-
கோமஸ்
-
அ.கி.பரந்தாமனார் பற்றிய நூல்கள்:
-
பல்துறை வித்தகர் பரந்தாமனார், அ. ப. சோமசுந்தரன் (பதி)
-
பரந்தாமனார் கவிதைகள் ஓர் ஆய்வு, எஸ். பிரேமகுமாரி
-
பல்துறை வித்தகர் அ.கி.ப.மறைமலை இலக்குவனார், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அ.கி.ப. ஆய்வுக் கருத்தரங்கில் ஆற்றிய தலைமையுரை.
-
மறைவு:
அ. கி. பரந்தாமனார் 1986 ஆம் ஆண்டில் சென்னையில் மரணமடைந்தார்.
