கார்முகப் படலம் - 753
சிவதனுசு சனகன் திருமுன் வந்து சேர்தல்
753.
நெடு நிலமகள் முதுகு ஆற்ற. நின்று உயர்
தட நிமிர் வடவரைதானும் நாண் உற.
‘இடம் இலை உலகு’ என வந்தது. - எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்துக் காணவே.
நெடுநில மகள் - பெரிய இப் பூமிதேவி; முதுகு ஆற்ற -
(நெடுங்காலமாக அந்த வில்லைத் தாங்கியதனால் ஏற்பட்ட) முதுகின்
நோவை ஆற்றிக் கொள்ளவும்; நின்று உயர் - நிலைபெற்று ஓங்கிய;
தடம் நிமிர் வடவரைதானும் - பெரிய மேரு மலையும்; நாண் உற-
(வில்லின் தோற்றம் கண்டு) வெட்கம் அடையவும்; கடல் புரை
திருநகர் - கடல்போல் பரந்துபட்ட மக்கள்; உலகு எங்கணும்-
உலகத்திலே எங்கும்; இடம் இலை என - இடம் இல்லை என்று
சொல்லும்படி; வந்தது - (அச்சிவ) வில்லானது (சுமக்கப்பட்டு) வந்தது.
உலகத்தவர் திரண்டு காணுமாறு அச்சிவ வில் ஆயிரக் கணக்கான
பணியாளரால் தாங்கப்பட்டு வந்தது. நெடுங்காலமாகச் சிவதனுசைத்
தாங்கியதனால் நோவுற்ற பூமிக்கு இப்போது இளைப்பாற இடம்
ஏற்பட்டது. நகர் - ஆகு பெயர். 4
