குலமுறை கிளத்து படலம் - 744

bookmark

புதல்வரின் வேத முதலிய கலைப்பயிற்சி

744.    

‘திறையோடும் அரசு இறைஞ்சும்
   செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
   புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
   உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை
   வளர்த்தானும் வசிட்டன்காண்.
 
உறை    ஓடும்- (பகைவரை வென்று) உறையில் அடங்கும்;  நெடு
வேலாய் -  நீண்ட  வேலினை  உடையவனே!; திறையோடும் - (இம்
மைந்தர்களுக்கு)   திறைப்   பொருள்கள்   கொண்டு   வந்து;  அரசு
இறைஞ்சும் - எல்லா அரசர்களும் வணங்கக் கூடிய; செறி கழல் கால்
- நெருங்கிய வீரக்கழல்  பூண்ட அடிகளையுடைய; தசரதன் ஆம்- தச
ரத     மன்னனாகிய;   பொறையோடும்   தொடர்  -  பொறுமைப்
பண்புடனே    பொருந்திய;   மனத்தான்  -  மனத்தையுடையவனுக்கு;
புதல்வர் - மைந்தர்கள்; எனும் பெயரே காண் - என்று சொல்லுகின்ற
பெயர்  ஒன்று  மாத்திரமே; உப  நயனம் விதி  முடித்து - (ஆனால்)
வேத  விதிப்படி  செய்யத்தக்க  உபநயனச்  சடங்குகளைச்  செய்வித்து;
மறை   ஓதுவித்த   -  வேதங்களைப்  பயிலுமாறு  செய்து;  இவரை
வளர்த்தானும் - இவர்களை வளர்த்தவன்; வசிட்டன் காண் - வசிட்ட
முனிவனே ஆவான்.

தசரதன்     நால்வர்க்கும்   தந்தை   ஆயினும் இக் குமாரர்களின்
நன்மையை     நாடிச்    சகல    கலைகளி்லும்     வல்லவராகுமாறு
வளர்த்தமையால்   வசிட்டனே  உண்மைத்   தந்தையெனத்   தக்கான்
என்றார்.                                                 24