க.வெள்ளைவாரணனார்

bookmark

இளமைக் காலம்:

தம் இளமைக்கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1935-37 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்து, 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்னும் ஆய்வேட்டினை எழுதி முடித்தார்.வெள்ளைவாரணனார் 1938 முதல் 1943 வரை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

அவரின் பணி:

1943 இல் வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1962 இல் இவரின் புலமை நலனைக் கருத்தில் கொண்டு விதிகளைத் தளர்த்தி பல்கலைக்கழகம் இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கியது. 1977 ஆம் ஆண்டு துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பல்கலைக்கழக ஆளவை மன்றம், ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணிபுரிந்தார். தம் 62 இம் வயது வரை அங்குப் பணியாற்றி 1979 இல் ஓய்வு பெற்றார். 1979 முதல் 1982 ஆம் ஆண்டு வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.
பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.

நூல்கள்:

வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண் மாண் நுழை புலத்தினைக் காட்டுவன. விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனார் எழுதிய நூல்கள் சில
இலக்கண நூல்கள்

 

 

 

  • தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்

  • தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்

  • தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்

  • தொல் பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்)

  • சங்க இலக்கியம் சார்ந்த நூல்கள்

  • குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி

  • சங்ககால தமிழ் மக்கள்

  • சைவ சமயம் சார்ந்த நூல்கள்

  • திருவுந்தியார்

  • திருக்களிற்றுப்படியார்

  • சேக்கிழார் நூல்நயம்

  • பன்னிரு திருமுறை வரலாறு

  • தில்லைப் பெருங்கோயில் வரலாறு

  • திருவருட்பாச் சிந்தனை

  • உரை நூல்கள்

  • தேவார அருள் முறைத்திரட்டுரை

  • திருமந்திர அருள் முறைத்திரட்டுரை

  • திருவருட்பயன் விளக்கவுரை

  • பிற நூல்கள்
    காக்கை விடு தூது என்னும் படைப்பிலக்கியத்தையும், இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நூல்களுள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

    இந்தி மொழி எதிர்ப்பு:

    இராஜ கோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போது 1938 இல் இந்தியாவிலேயே முதன் முதலாகச் சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்த மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பெரியார், அறிஞர் அண்ணாதுரை முதலானோர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939 இல் ‘பாந்தளூர் வெண்கோழியார்’ என்ற புனைப் பெயரில்‘காக்கை விடுதூது’ என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.

    மறைவு:

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது. எனவே தில்லை சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.