நாம் என்ன செய்வோம்.

நாம் என்ன செய்வோம்.

bookmark

("நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப் பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம்" என்றவர்ணமெட்டு)

ராகம் - புன்னாகவராளி
தாளம் - ரூபகம்

பல்லவி

நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம். (நாம்)

சரணங்கள்

திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
  செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
  பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்)    1

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
  செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார்,
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்,
  பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)    2

பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை
  பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
  சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்)    3

சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
  சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாமெத் தையோ 'வந்தே' யென்று துதிக்கிறார்
  தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்)    4