முருகன்பாட்டு - 2

முருகன்பாட்டு - 2

bookmark


வீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி 
  வேலும் மயிலும்என் முன்னின்றே - எந்த 
நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை 
  நீலி பராசக்தி தண்ணருட் - கரை 
ஓரத்திலே புணை கூடுதே! - கந்தன் 
  ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை 
வாரத் திலேவிளை யாடுவான் -என்றும் 
  வானவர் துன்பத்தைச் சாடுவான். 

வேடர் கனியை விரும்பியே- தவ 
  வேடம் புனைந்து திரிகுவான்- தமிழ் 
நாடு பெரும்புகழ் சேரவே -முனி 
  நாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர் 
பாடு விடிந்து மகிழ்ந்திட - இருட் 
  பார மலைகளைச் சீறுவான்-மறை 
யேடு தரித்த முதல்வனும் - குரு 
  வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 

தேவர் மகளை மணந்திடத் -தெற்குத் 
  தீவில சுரனை மாய்த்திட்டான், - மக்கள் 
யாவருக் குந்தலை யாயினான், - மறை 
  அர்த்த முணர்ந்துநல் வாயினன், - தமிழ்ப் 
பாவலர்க் கின்னருள் செய்குவான், - இந்தப் 
  பாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின் 
ஆவ லறிந்தருள் கூட்டுவான், - நித்தம் 
  ஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 

தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன் 
  சேவகத் தின்புகழ் காட்டினார், - ஒளி 
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார், - நின்றன் 
  மேன்மையி னாலறம் நாட்டினார், - ஜய! 
நீவள ருங்குரு வெற்பிலே - வந்து 
  நின்றுநின் சேவகம் பாடுவோம் - வரம் 
ஈவள் பராசக்தி யன்னை தான் - உங்கள் 
  இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)