வரைக்காட்சிப் படலம் - 916

bookmark

புழுதியாடிய யானையின் தோற்றம்

புழுதி படிய வரும் யானை
 
916.

மண் உற விழுந்து. நெடு வான் உற எழுந்து.-
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார்
உண் நிற நறும் பொடியை வீசி. ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம்.
 
மண்ணுற  விழுந்து  -  புழுதி  (தன் மேல்)  படியும்படி  பூமியில்
விழுந்து;  நெடு வானுற  எழுந்து - வானத்தில் பொருந்துமாறு மேலே
எழுந்து;  கார்நிறம் - தனது கரிய நிறத்தை; உண் நறும் பொடியை -
மறைக்கின்ற  மணமுள்ள  புழுதியை;  ஒருபாகம்   வீசி - ஒரு பக்கம்
கையால்  வீசிவிட்டு;  வெண்ணிறம்  நறும்பொடி  -  ஒரு  பகுதியில்
மட்டும்   வெண்ணிறமான   நறும்பொடியை;  புனைந்த  -  அணிந்த;
மதவேழம்  -  மதயானையானது;  கண்நுதல் பொருந்த வரு - சிவன்
தன்னிடம் பொருந்த வருகின்ற; கண்ணனின் - திருமால் போல; வரும்
- வரும். 

சிவனைத்   தன் வலப்பக்கத்தே  உடையவன் திருமால். ‘வலத்தனன்
திரிபுரம் எரித்தவன்’  -  (திருவாய் 1-3-9).  மேனியில் படிந்த பொடியை
ஒரு  பக்கம்  நீக்கி ஒரு பக்கம்  மட்டும்  அணிந்திருந்த யானை சங்கர
நாராயணத் திருகோலம் போலத் தோன்றியது என்பது கருத்து.       19