வரைக்காட்சிப் படலம் - 928
கவிக்கூற்று
928.
சுற்றிய கடல்கள் எல்லாம்
சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன.
பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர். தேவிமார்கள்.
மைந்தர்கள். கொம்பனார். வந்து
உற்றவர். காணலுற்ற
மலை நிலை உரைத்தும் அன்றே!
சுற்றிய கடல்கள் எல்லாம் - (உலகத்தை) சூழ்ந்துள்ள கடல்கள்
யாவும்; சுடர் மணிக் கனகக் குன்றை - ஒளிவிடும் மணிகளைக்
கொண்ட மேருமலையை; பற்றிய - கவர்ந்து கொள்ளும் பொருட்டு;
வளைந்த என்ன - வளைத்துக் கொண்டன என்று சொல்லும்படி;
சேனை பரந்து வந்து - (அம் மலை இடங்களில்) அந்தச் சேனைகள்
பரவி வந்து; இறுத்த - தங்கின; கொற்றவர் தேவிமார்கள் -
அரசர்களும் அவ்வரசரின் மனைவியரும்; மைந்தர்கள் கொம்பு
அனார் - அரசிளங்குமரரும் பூங் கொம்பு போன்ற இளவரசியரும்
ஆகிய; வந்து உற்றவர் - (அங்கு) வந்து சேர்ந்தவர்கள்; காணலுற்ற
மலை - காண்பதற்கு அமைந்த அச் சந்திரசயிலத்தின்; நிலை
உரைத்தும் - தன்மையை இனிச் சொல்லுவோம்.
மலையைச் சுற்றிய அடிவாரங்களில் சேனை தங்கியது மேரு
மலையைக் கவருமாறு நாற்கடல்களும் வளைத்துள்ளன போலும்
என்றார் - தற்குறிப்பேற்ற உவமையணி. 1
