வரைக்காட்சிப் படலம் - 934

bookmark

934.

பேணுதற்கு அரிய கோலக்
   குருளை. அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக்
   கன்றொடு களிக்கும் முன்றில்.
கோணுதற்கு உரிய திங்கட்
   குழவியும். குறவர்தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர்
   மகவொடு. தவழும் மாதோ!
 
அம்  பிடிகள்  ஈன்ற  -  அழகிய பெண் யானைகள் பெற்றெடுத்த;
காணுதற்கு  இனிய வேழக் கன்றொடு - காண்பதற்கு இனிய யானைக்
கன்றுகளோடு;   முன்றில்  பேணுதற்கு   அரிய   -  (குடிசைகளின்)
முற்றகளிலே பேணி வளர்த்தற்கு அரிய; கோலக் குருளை களிக்கும் -
அழகிய    சிங்கக்     குட்டிகளும்     மனமகிழ்ந்து     விளையாடும்
(அல்லாமலும்); கோணுதற்கு உரிய - வளையும் தன்மை  கொண்டுள்ள;
திங்கள்  குழவியும் - இளஞ்சந்திரனும்; குறவர் தங்கள் வாள்நுதல் -
குறவர்களின்  ஒளி  பொருந்திய  நெற்றியையுடைய;  கொடிச்சி மாதர்
மகவொடு  -  (மனைவியரான)   குறத்தியர்  பெற்ற  குழந்தைகளோடு;
தவழும் - தவழ்ந்து விளையாடும். 

யானைக்     கன்றோடு   சிங்கக்  குருளைகள்  களிக்கும்  எனவும்.
இளஞ்சந்திரனும்   குறத்தியர்    குழந்தைகளோடு    தவழும்  எனவும்
கூறினார்.  நிலத்தின்  தன்மையால்   இயற்கைப்  பகையாயினவும்  அப்
பகைமை  ஒழிந்து  நட்புப்  பூண்டு   ஒழுகின  என்பதை   உணரலாம்.
கோலக் குருளை: அழகிய சிங்கக்குட்டி.                          7