வரைக்காட்சிப் படலம் - 935
935.
அஞ்சனக் கிரியின் அன்ன
அழி கவுள் யானை கொன்ற
வெஞ் சினத்து அரியின் திண் கால்
சுவட்டொடு. - விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும். நீலக்
குல மணித் தலத்தும். - மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த
பசுஞ் சுவடு உடைத்து மன்னோ!
(அம் மலை) குல நீல மணித் தலத்தும் - சிறந்த இந்திர நீலக்
கற்களால் அமைந்த அம்மலை (முறையே); அஞ்சனக் கிரியின்
அன்ன - கரிய மலையை ஒத்த; அழி கவுள் யானை - மதநீர்
ஒழுகும் கன்னம் உடையதுமான யானைகளை; கொன்ற வெஞ்சினத்து
அரியின் - கொன்ற கடுங்கோபமுடைய சிங்கத்தினது; திண் கால்
சுவட்டொடு - சிங்கத்தினது வலிய கால்கள் பட்ட அடித்தடங்களும்;
விஞ்சை வேந்தர் குஞ்சி அம் தலத்தும் - வித்தியாதர அரசர்களின்
அழகிய மயிர்முடியுள்ள தலையிலும்; மாதர் பஞ்சி அம் கமலம் -
(அவர்) மனைவியரின் செம்பஞ்சு ஊட்டிய அடித் தாமரைகள்; பூத்த
பசுஞ் சுவடு - படுதலால் உண்டாகிய ஈரமான சுவடுகளும்; உடைத்து -
உடையதாக இருந்தது.
அம் மலையின் இடங்களில் யானையோடு போர்செய்து அவற்றைக்
கொன்ற சிங்கங்களின் அடிச்சுவடுகள் பட்டுள்ளன (ஒரு புறம்)
ஊடலில் பணிந்த தலைவரின் முடியுள்ள தலைகளில் அவர்
மனைவியரின் காற்சுவடுகள் பட்டன (இன்னொரு புறம்); இவ்வாறு
அம் மலையில் அச்சக் குறிகளும் இன்பக் குறிகளும் ஒருங்கே
காணப்பெற்றன. 8
