வரைக்காட்சிப் படலம் - 936
936.
செங் கயல் அனைய நாட்டம்
செவி உறா. முறுவல் தோன்றா.
பொங்கு இருங் கூந்தல் சோரா.
புருவங்கள் நெரியா. பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி.
நரம்பு அளைந்து. அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு.
கின்னரம் மயங்கும் மாதோ!
மங்கையர் - மகளிர்; செங்கயல் அனைய நாட்டம் - அழகிய
கயல் மீன்களையொத்த கண்கள்; செவி உறா - காதுவரை சென்று
மீளாதவாறும்; முறுவல் தோன்றா - பற்களில் ஒளி வெளியே
தோன்றாவாறும்;பொங்கு இருங் கூந்தல் சோரா - மிகத் திரண்ட மயிர்
முடிப்புக் குலைந்து விழாதபடியும்; புருவங்கள் நெரியா -
புருவங்கள் வளைந்து தோன்றாதபடியும்; பூவின் அங்கையும் மிடறும்
கூட்டி - தாமரை போனற தம் உள்ளங்கையையும் குரலையும்
ஒருவழிப்படுத்தி; நரம்பு அளைந்து - நரம்பைத் துழாவி (அதனால்
உண்டாக்கும்); அமுதம் ஊறும் - அமுதம் போல் இனிமை தோற்றும்;
பாடல் கேட்டு - இன்னிசையைக் கேட்டு; கின்னரம் மயங்கும் -
கின்னரப் பறவைகளும் திகைத்து நிற்கும்.
‘அங்கையும் மிடறும் கூட்டி நரம்பளைந்து’ என்றது. மிடற்றுக்
குரலுக்கு ஏற்பக் கைத்தொழில் புரிந்து நரம்பில் இன்னோசை
உண்டாக்கி என்றபடி. கின்னரம்: இசையின் குற்றங்களையும்
குணங்களையும் அறியவல்லதாய் எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாக
இருக்கும் ஒருவகைப் பறவை இசையில் வல்ல தேவசாதி என்றும்
பொருள் கூறுவர். 9
