வரைக்காட்சிப் படலம் - 938

bookmark

938.

ஆடவர் ஆவி சோர.
   அஞ்சன வாரி சோர.
ஊடலின் சிவந்த நாட்டத்து
   உம்பர்தம் அரம்பை மாதர்.
தோடு அவிழ் கோதைநின்றும்
   துறந்த மந்தார மாலை.
வாடல. நறவு அறாத.
   வயின் வயின் வயங்கும் மாதோ!
 
ஆடவர்  ஆவி   சோர  -  (தம்)  கணவரின்  உயிர்  வருந்தித்
தளரும்படி;  அஞ்சனம்  வாரி  சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர்
பெருகுமாறு; ஊடலில்  சிவந்த  நாட்டத்து  -  புலவியால் செந்நிறம்
அடைந்த   கண்களையுடைய;  உம்பர்தம்   அரம்பை   மாதர்   -
தேவர்களின்   மனைவியர்;   கோதை  நின்றும்   துறந்த   -  தம்
முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ்
விரிந்த  மந்தார  மாலைகள்;  வாடல நறவு அறாது - வாடாதனவாகித்
தேனும்  நீங்காமல்; வயின் வயின் வயங்கம் - அந்தந்த இடங்களிலே
விளங்கும். 

ஊடல்     கொண்ட  தேவ  மாதர் தம் கணர் வருந்துமாறு சிவந்த
கண்களில்  கண்ணீரைப்  பெருக்கிக்  கழற்றியெறிந்த மந்தார மாலைகள்
அம்  மலையின்  பல  இடங்களிலும்  காணப்படும்   என்பது.  தெய்வ
மாலையாதலின் வாடாமலும். நறவு அறாமலும் இருந்தன.           11