வரைக்காட்சிப் படலம் - 940

bookmark

940.

சரம் பயில் சாபம் என்னப்
   புருவங்கள் தம்மின் ஆடா.
நரம்பினோடு இனிது பாடி.
   நாடக மயிலோடு ஆடி.
அரம்பையர் வெறுத்து நீத்த
   அவிர் மணிக் கோவை ஆரம்.
மரம் பயில் கடுவன் பூண.
   மந்தி கண்டு உவக்கும் மாதோ.
 
சரம் பயில் சாபம் என்ன - அம்பு பொருந்திய வில்லைப் போன்ற;
புருவங்கள் தம்மின் ஆடா - புருவங்கள் தம்மிலே ஆடாமல் இருக்க;
நரமபினோடு இனிது பாடி - யாழ் நரம்போடு பொருந்த இனிமையாகப்
பாடி;  மயிலோடு நாடகம் ஆடி - மயில்களோடு (ஒப்ப) நடனம் ஆடி;
அரம்பையர்  வெறுத்து  -  தெய்வ  மகளிர்  (கணவர் மீது) ஊடலை
உட்கொண்டு; நீத்த  அவிர்மணிக் கோவை - கழற்றியெறிந்த ஒளிரும்
நவமணி   மாலைகளையும்;  ஆரம் - முத்தாரங்களையும்; மரம் பயில்
கடுவன்  -   மரங்களில் பழகுகின்ற ஆண்குரங்குகள்; பூண - (தமக்கு)
அணிவிக்க;  மந்தி  கண்டு  உவக்கும்  -  பெண்  குரங்குகள் (அந்த
அணிகளின்) அழகைக் கண்டு மகிழ்ச்சியடையும். 

தெய்வப்     பெண்கள்  ஊடலால்  கழற்றியெறிந்த  இரத்தினமாலை
முதலியவற்றை  ஆண்குரங்குகள்  பெண்குரங்குகளுக்கு  பூட்டின; அந்த
அழகைக் கண்ட அப் பெண் குரங்குகள் மகிழ்ந்தன என்பது.       13