வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
ராகம் - தாண்டகம்
தாளம் - ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்; - கனல் - மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்; - வலி - காட்டுவேன். (நாட்டி) 1
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய்; - எமை - தூஷித்தாய்,
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய்; - பொருள் - ஈட்டினாய் (நாட்டி) 2
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய்; - சட்டம் - மீறினாய்,
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய்; - வீரம் - பேசினாய் (நாட்டி) 3
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய், - புன்மை - போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய்; - ஆசை ஊட்டினாய் (நாட்டி) 4
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய்; - புகழ் வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய்; - சோர்வை ஓட்டினாய் (நாட்டி) 5
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய், - விதை - தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி) 6
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன்; - குத்திக் கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன்; - பழி - கொள்ளுவேன். (நாட்டி) 7
