திருவினாத் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

951

அண்டங் கடந்த சுவடு முண்டோ

அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ

பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ

கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ

சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.1

952

எரிகின்ற இளஞாயி றன்ன மேனி

இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ

வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ

அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ

சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.2

953

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ

நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ

பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ

கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ

சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.3

954

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ

பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ

ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ

காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ

எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.4

955

நீறுடைய திருமேனி பாக முண்டோ

நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ

கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ

அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ

எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

6.97.5

956

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்

பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்

குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்

கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்

தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

6.97.6

957

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்

அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்

பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்

கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்

மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

6.97.7

958

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்

நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்

கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்

அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்

இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.

6.97.8

959

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு

வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு

சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு

வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு

இமையோர் பெருமா னிலாத தென்னே.

6.97.9

960

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

ஓரூர னல்லனோ ருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்

அவனருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

6.97.10

961

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்

புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்

மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை

அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்

சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

6.97.11

திருச்சிற்றம்பலம்