திருப்புகலூர் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

972

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்

கழலடியே கைதொழுது காணி னல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.1

973

அங்கமே பூண்டாய் அனலா டினாய்

ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்

பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்

சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்

திருப்புகலூர் மேவிய தேவ தேவே.

6.99.2

974

பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்

பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்

மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்

அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.3

975

தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்

சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்

மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி

அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.4

976

நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்

நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே

பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே

கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.5

977

விரிசடையாய் வேதியனே வேத கீதா

விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே

திருவாரூர்த் திருமூலத் தான மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்

வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.6

978

தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்

திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி

நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்

கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.7

979

நெய்யாடி நின்மலனே நீல கண்டா

நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே

மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை

கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.8

980

துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்

துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்

சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே

அக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.9

981

ஒருவனையு மல்லா துணரா துள்ளம்

உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மே லேவி

இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்

கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.99.10

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் ஆறாம் திருமுறை முற்றும்.