காரல் மார்க்ஸ்

bookmark

உலகின் தலை சிறந்த காதல், நட்பு, சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால், அப்பெருமை காரல் மார்க்சுக்குத் தான் போய் சேரும். வறுமை, நோய், துண்டம், பசி, போராட்டம் என அனைத்தையும் வாழ்க்கை முழுவதும் சந்தித்த காரல் மார்க்ஸ், தனது கடைசி காலம் வரையில் பாட்டாளி வர்கத்துக்காகவே உழைத்தவர்.பாட்டாளிகளின் விடுதலைக்காக பாடுபட்டவர். காரல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். கார்ல் மார்க்சின் தந்தை யூதரான ஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக மதம் மாறினார். இவரது தந்தை வசதி படைத்த வழக்கறிஞர் , கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார்.மகன் காரல் மார்க்சுக்கு அதிகம் சுகந்திரம் அளித்தார் அவரது தந்தை ஹைன்றிச் மார்க்சு. காரல் மார்க்ஸின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். தமது புரட்சி மிக்க எழுத்துக்களால் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப் படுகிறார்கள் என்பதை எழுதி பாட்டாளிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தனது எழுத்துக்களால் ஐரோப்பாவில் அக்காலத்தில் நிலவிய முதலாளித்துவக் கொள்கைக்கு சவுக்கடி கொடுத்தவர் . ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.

ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் ஜான் ஜாக் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கை" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், ஜெர்மனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.

மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது.

கார்ல் மார்க்சின் பிறந்த இடம் - டிரையர். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் எதிரிகளுக்குப் புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மனித வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.

“ ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."

காரல் மார்க்ஸ் , மேலும் தனது எழுத்துக்களில் மூலம் விவரிக்கிறார். அதாவது " ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதற்க்கு ஒரு விலை கொடுத்தே அதை வாங்குவீர்கள். அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு , நீங்கள் கொடுக்கும் பணம் போய்ச் சேர்கிறதா என்றால் இல்லை. மூலதனத்தைப் போட்ட முதலாளி ஒட்டு மொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார். அப்படியில்லாமல் மூலத்தை உளைக்கிரவனுக்கும், பிரித்துத் தர வேண்டும்". இந்த எழுத்துக்களால் எரிச்சல் அடைந்த உலக முதலாளிகள் ஏராளம்.

உலகின் பொருளாதாரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் . அவர் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. அவர் மனைவி ஜென்னி மிகவும் பணக்கார இடத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆனால் காரல் மார்க்ஸ் அவர்களை திருமணம் செய்த பின்னர், அவர் படாத கஷ்டம் இல்லை. அவளுக்குப் பிறந்த குழந்தைகள் மாண்டு போனார்கள். அக்குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யக் கூட காசு இல்லாமல் இருந்தது ஜென்னி தனது டைரி குறிப்பில் தனது குழந்தை இறந்த வருத்தத்தை இவ்வாறு எழுதிகிறாள் "பிறந்த பொழுது உனக்குத் தொட்டில் கட்ட காசில்லை. இப்பொழுது இறந்து அடக்கம் செய்ய காசில்லை. நீ ஏன் என் வயிற்றில் பிறந்தாய் " என்று. ஜென்னி பசியால் நொடிந்து போய் இருக்க மார்பில் இருந்து ரத்தம் சொட்ட பிள்ளைகளுக்குப் பாலூட்டிய கொடுமையிலும் கூட, மார்க்ஸை அன்புடன் சுருட்டு வாங்கிக் கொடுத்து கவனித்தார் .

1881 ஆம் ஆண்டு டிசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது.இவர் 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,

"மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று மணிக்குக் கால் மணிநேரம் இருந்த போது வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்" என்றார்.

இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.