கார்முகப் படலம் - 756
756.
‘திண் நெடு மேருவைத்
திரட்டிற்றோ?’ என்பார்;
‘வண்ண வான் கடல் பண்டு
கடைந்த மத்து’ என்பார்;
‘அண்ணல் வாள் அரவினுக்கு
அரசனோ?’ என்பார்;
விண் இடு நெடிய வில்
வீழ்ந்ததோ?’ என்பார்.
(இந்த வில்); திண்நெடு மேருவை - வலிய நெடிய மேருவை;
திரட்டிற்றோ - திரட்டிச் செய்ததோ; என்பார் - என்று
சொல்பவர்களும்; வண்ணவான் கடல் - அழகிய நீண்ட பாற்கடலை;
பண்டு கடைந்த- முன்பு கடைந்த; மத்து என்பார் - மத்தாகிய மந்தர
மலையே என்று சொல்பவர்களும்; அண்ணல் வாள் - பெருமை
மிகுந்த ஒளியுள்ள; அரவினக்கு அரசனோ - பாம்புகளுக்கு
அரசனாகிய ஆதிசேடனோ; என்பார் - என்று கூறுபவர்களும்; விண்
இடு - வானத்தில் இடுகின்ற; நெடிய வில் - நீண்ட இந்திரவில்லே;
வீழ்ந்ததோ என்பார் - தவறிக் கீழே விழுந்துவிட்டதோ என்று
சொல்பவர்களும்.
வில்லைக் கண்டவர் பலபடியாகப் புனைந்து கூறினர் என்பது -
தற்குறிப்பேற்ற அணி. பாம்பு வில்லுக்கு உவமையாதல் - ‘அரவின்
தோற்றமே போலும் சிலை’ - சீவக. 2158 7
