கார்முகப் படலம் - 763
763.
‘தாளுடை வரி சிலை. சம்பு. உம்பர்தம்
நாள் உடைமையின். அவர் நடுக்கம் நோக்கி. இக்
கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்.
சம்பு - (தன் சினம் மாறிய) சிவன்; அவர் நடுக்கம் நோக்கி -
தேவர்கள் அஞ்சி நடுங்குவதைப் பார்த்து; உம்பர்தம் நாள் -
அத்தேவர்கள் வாழ்நாட்கள்; உடைமையின் - நீண்டு இருந்தமையால்;
தாள்உடை - வலிய அடித்தண்டையுடைய; வரிசிலை - கட்டமைந்த
அவ்வில்லை; இக்கோள் உடை - வலிமையுடைய; விடை அனான் -
இந்தக் காளை போன்ற சனகனது; குலத்துள் தோன்றிய - குலத்திலே
பிறந்த; வாள் உடை உழவன் - வாளாகிய ஏர் கொண்டு உழுபவனான;
ஓர் மன்னன்பால் - ஓர் அரசனிடத்தில்; வைத்தான் - கொடுத்தான்.
சிவன் அந்த வில்லைத் தேவராதனிடம் கொடுத்து வைத்தான்.
‘வில்லேர் உழவர்’ என்றாற்போல ‘வாளுடை உழவன்’ என்றார்.
‘வாளேருழவன்’ - புற. 368. ‘வில்லேர் உழவர்’ ‘சொல்லேர் உழவர்’ -
திருக். 882. 14
