நடிப்பு சுதேசிகள்

நடிப்பு சுதேசிகள்

bookmark

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
  வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
  வாய்ச் சொல்லில் வீரரடி!    1

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
  நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
  நாளில் மறப்பா ரடீ!    2

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
  அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
  அகலிகளுக் கின்ப முண்டோ ?    3

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
  பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
  பேசிப் பயனென் னடீ!    4

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
  மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
  மாங்கனி வீழ்வ துண்டோ !    5

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
  செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
  செய்வ தறியா ரடீ!    6

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
  நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
  நம்புத லற்றா ரடீ!    7

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
  பேதைகள் போலு யிரைக் - கிளியே
  பேணி யிருந்தா ரடீ!    8

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
  ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
  அஞ்சிக் கிடந்தா ரடீ!    9

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
  உச்சத்திற் கொண்டா ரடீ? - கிளியே
  ஊமைச் சனங்க ளடீ!    10

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
  மாக்களுக் கோர் கணமும் - கிளியே
  வாழத் தகுதி யுண்டோ ?    11

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
  ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
  இருக்க நிலைமை யுண்டோ ?    12

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
  வந்தே மாதர மென்பார்! - கிளியே!
  மனத்தி லதனைக் கொள்ளார்.    13

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
  பழமை இருந்த நிலை! - கிளியே!
  பாமர ரேதறி வார்!    14

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
  தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
  சிறுமையடைவா ரடீ!    15

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
  சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
  செம்மை மறந்தா ரடீ!    16

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
  துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
  சோம்பிக் கிடப்பா ரடீ!    17

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
  வாயைத் திறந்து சும்மா - கிளியே!
  வந்தே மாதர மென்பார்!    18