மிதிலைக் காட்சிப் படலம் - 629

bookmark

மாலைப்பொழுது கண்டிரங்கல்

629.

‘மை வான் நிறத்து. மீன் எயிற்று.
   வாடை உயிர்ப்பின். வளர்செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே!
   என்னை வளைத்துப் பகைத்தியால்
எய்வான் ஒருவன் கை ஓயான்;
   உயிரும் ஒன்றே; இனி இல்லை;
உய்வான் உற. இப் பழி பூண.
   உன்னோடு எனக்குப் பகை உண்டா?
 
வான்   - ஆகாயத்திலே பரவிய; மைநிறத்து - கரு  நிறத்தையும்;
மீன் எயிற்று  -  நட்சத்திரங்களாகிய  நச்சுப்  பற்களையும்;  வாடை
உயிர்ப்பின் - வாடைக் காற்றாகிய பெருமூச்சையும்; வளர் செக்கர் -
பரவிய  செவ்வானமாகிய; பை வாய் - நச்சுப்பை கொண்ட வாயையும்
உடைய;  அந்தி  -   அந்திப்   பொழுதாகிய;  படம்  அரவே  -
படத்தையுடைய   நாகமே!  (நீ) எக்காரணத்தால்; என்னை வளைத்து
-  என்னை  வளைத்துப்பற்றி;  பகைத்தி  -   என்னோடு  பகைத்து
(என்னை)  வருத்துகிறாய்?;   எய்வான்   ஒருவன்   -  (என்மேல்)
அம்புகளை   எய்பவனாகிய  மன்மதன்;  கை   ஓயான்  - (எய்யும்
தொழிலில்) கை சிறிதும் தளர்கிறவன் அல்லன்;   உயிரும்   ஒன்றே
- (எனக்கு உள்ளதோ)  ஓர்  உயிர்தான்;  இனி இல்லை - (அதனை
அவன்  கவர்ந்துவிட்டால்)  உன்னால்  கவர  என்னிடம் வேறு உயிர்
இல்லை; உய்வான் உற - (அம் மன்மதனிடமிருந்து) தப்பிப் பிழைக்க
நான் முயன்று   வருங்காலத்து;   இப்  பழி  பூண  -  இப் பெண்
பழியை ஏற்பதற்கு; என்னோடு உனக்கு - என்னிடம் உனக்கு; பகை
உண்டோ - என்ன பகை உள்ளதோ?   

உருவக  அணி: அச்சம் தருவதால் இருளைக் கருநிறமாகவும். பள
பளத்தலால்   வானத்து   மீனைப்  பல்லாகவும்.  அனல்  வீசுவதால்
வாடையைப்   பெருமூச்சாவும்.   தன்னை   விழுங்குவது   போன்று
இருத்தலால்   செவ்வானத்தை   வாயாகவும்.   சொல்ல   வருதலால்
மாலையைப் பாம்பாகவும் உருவகப்படுத்தினாள். காற்று: வடக்கிலிருந்து
வீசும் காற்று.                                            66