மு.கதிரேசச் செட்டியார்

bookmark

பிறப்பும் கல்வியும்:

கதிரேச செட்டியார் மகிபாலன் பட்டியில் முத்துகருப்பன், சிவப்பி ஆச்சி அவர்களுக்கு 16-10 -1881 அன்று பிறந்தார். சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் துன்புற்றார். தந்தை மலேசியா இலங்கை முதலிய நாடுகளுக்கு வாணிகம் செய்யச் சென்றதால் இவர் தனது ஏழாம் வயதில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். அப்பொழுதே ஆத்திசூடி, உலக நீதி அகியவற்றின் சொல்லழகு இவரைக் கவர்ந்ததால் படிப்படியாக திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆகியவற்றைத் தாமே ஓதி உணர்ந்தார்.

இளமைக்காலம்:

அக்காலத்தில் இருந்த தம் குல வழக்கப்படி தனது 11 ஆம் வயதில் பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். இலங்கையின் எழிலில் அவர் மனம் பறி கொடுத்த நேரத்தில் அவருக்கு மீண்டும் வாத நோயின் கொடுமை தலைகாட்டியது. அப்பொழுது தனது தந்தையின் திடீர் மரணம் அவருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. உடலும் உள்ளமும் மிகவும் நலிவுற்ற நிலையில் தனது 14 ஆம் வயதில் அவர் தாய்நாடு திரும்பினார். நோய் தீவிரமானதால் ஊன்று கோலின்றி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, தனது நோயின் காரணமாக நடமாட முடியாமையால் கிடைத்த ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்றார். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றை இவர் ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தொல்காப்பியத்தையும் அதற்கான சேனாவரையரின் உரையையும் தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார்.

இலக்கியப்பணி:

அரசஞ்சண்முகனாரின் மூலம் மதுரை ‘வித்யா பானு’ அச்சகத்தின் உரிமையாளரான மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் நட்பு கதிரேசனாருக்குக் கிடைத்தது. இதன் பயனாய் இவர் வித்யாபானு இதழுக்குப் பல அரிய தமிழ் கட்டுரைகள் எழுதினார்.

தமிழ்த்தொண்டு:

கதிரேசனாரின் துவக்க காலத் தமிழ்த் தொண்டில் குறிப்பிடத்தக்கது மேலைச் சிவபுரியில் இவர் அமைத்து நடத்திய ‘சன்மார்க்க சபை’ ஆகும். பொருளியலில் காட்டிய ஆர்வத்தை நகரத்தார் கல்வியில் காட்டாது இருந்த அக்காலத்தில் சன்மார்க்க சபையின் மூலம் அவ்வினத்தாரிடம் தமிழார்வத்தைத் தூண்டி வளர்த்த பெருமை கதிரேசனாரையே சாரும். இதற்கு பொருளுதவி செய்தவர் பழநியப்ப செட்டியார் என்ற பெரும் செல்வராவார். மேலும் இச்சபையின் பிரிவுகளாக ‘கணேசர் செந்தமிழ்க் கலாசாலை’, ‘தொல்காப்பியனார் நூல் நிலையம்’ ஆகியவை ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. இச்சபை பல பேரறிஞர்கள் முன்னிலையில் இவரின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியது அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இச்சபையில் சொற்பொழிவாற்றியுள்ளனர். இவர்களில் திரு. வி. க., உ. வே. சாமிநாதைய்யர், மகாவித்துவான் ரா. ராகவ ஐயங்கார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், சுவாமி விபுலானந்தர், உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இச்சபையின் ஆதரவால் தான் பண்டிதமணி அவர்கள் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை' தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கினார். ஆனால், இப்பணி இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதுதான் முடிவுற்றது. இச்சபையின் சார்பாகத் துவக்கப்பட்ட 'கணேசர் செந்தமிழ்க் கல்லூரி', சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சிறப்புடன் நடந்து இன்றும் இவரின் தமிழ்த்தொண்டினை நினைவூட்டும் சின்னமாக விளங்குகிறது.

சமயத்தொண்டு:

பண்டித மணி சமயத்துறையில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். மணிவாசகப் பெருமானிடம் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக அண்ணமலை நகரில் இருந்த போது ‘மணிவாசக மன்றம்’ என்ற பேரவையைத் தோற்றுவித்தார். அவர் எழுதியுள்ள ‘சமயக் கட்டுரைகள்’ (உரைநடைக் கோவை-முதற்பகுதி) இவரின் சமய அறிவின் மேன்மை, நுண்மை, சமய விரிவு ஆகியவற்றைக் காட்டும். கதிரேசனாரின் பெரும் தொண்டுகளில் மணிமகுடமாக விளங்குவது அவர் திருவாசகத்திற்கு எழுதிய விளக்கவுரை ஆகும். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் படுத்த படுக்கையாய் கிடக்கும் போதும் திருவாசகத்திற்கு உரை எழுதுவதில் பெரும் அமைதி கண்டார். இவரது உரை 1950 ஆம் ஆண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரின் ஆராய்ச்சித் துறைக்கான பரிசினைப் பெற்றது.

மொழிபெயர்ப்பு நூல்கள்:

பல வடமொழி நூல்களை இவர் மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த நூல்கள்

  • பிராதபருத்தரீயம்

  • மாலதி மாதவம்

  • சுக்கிர நீதி

  • உதயணன் சரிதை

  • சுலோசனை

  • மண்ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்)

  • கெளடலீயம் பொருணூல் (கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்)

  • மிருச்சகடிகம்

  • இரசங்காதாரம்

  • இவற்றுள் பிராதபருத்தரீயம்,மாலதிமாதவம் ஆகியவை அச்சிடப்படவில்லை.சுக்கிராச்சாரியார் என்பவர் எழுதிய சுக்கிரநீதி ஒரு நீதி நூல் ஆகும். அசோகன், சந்திரகுப்தன் ஆகிய மன்னர்கள் காலத்தில் நிலவிய நீதி,ஆட்சிமுறைகளை இந்நூல் விளக்குகிறது.இந்நூல் குறளின் கருத்துகள் பலவற்றோடு ஒத்த நீதிகளை உள்ளடக்கிய பெருமை வாய்ந்தது.

    தன்மானமும் பட்டமும்:

    தமிழறிவு மிக்க வறுமையில் வாடிய புலவர்களை ஆதரிப்பதில் கதிரேசனார் வள்ளன்மை மிக்கவராக விளங்கினார். இவருடைய மனைவி மீனாட்சி ஆச்சியும் இவரின் பொதுத் தொண்டிற்குத் துணையாய் இருந்தார். பண்டிதமணி தன்மானத்தைக் காப்பதில் சிங்கமாக விளங்கினார். இவருக்கு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க அரசாங்கம் எண்ணியது. ‘மகாமகோபாத்தியாயப் பட்டம்’ ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே உரியது என எண்ணி அதற்குப் பதிலாக ‘இராவ் பகதூர்’ என்ற பட்டம் வழங்க விரும்பியது. அரசியலாரின் குறுகிய நோக்கத்தினையும் அறியாமையையும் அறிந்த பண்டிதமணி ‘இராவ் பகதூர்’ பட்டத்தை ஏற்க மறுத்தார். இவரின் தன்மானம் காக்கப்பட்டதோடு மட்டுமன்றி, அவரின் துணிவுக்குப் பரிசாக ‘மகாமகோபாத்தியாயப் பட்டம்’அவரை நாடி வந்தது.

    மறைவு:

    பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இரத்தக் கொதிப்பின் காரணமாக மிகவும் துன்புற்றார். நோயின் தீவிரத்தால் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் காலமானார்.