வரைக்காட்சிப் படலம் - 903

bookmark

ஏழிலைப்பாலைமரத்தை ஒரு யானை அழித்தல்

903.

பாத்த யானையின் பதங்களில்
   படு மதம் நாற.
காத்த அங்குசம் நிமிர்ந்திட.
   கால் பிடித்து ஓடி.
பூத்த ஏழிலைப் பாலையைப்
   பொடிப் பொடி ஆக.
காத்திரங்களால். தலத்தொடும்
   தேய்த்தது - ஓர் களிறு.
 
பாத்த  யானையின் - (அணியணியாக) பிரித்துள்ள யானைகளைக்
கட்டிய;  பதங்களில் - இடங்களில்; படு மதம் - தோன்றும் மதநீரின்;
நாற - மணம் போன்று (ஏழிலைப் பாலையிலிருந்து) மணம்  வீசியதால்;
ஓர் களிறு - (அதைத் தாங்காத) ஒரு யானையானது; காத்த அங்குசம்
நிமிர்ந்திட  -  (தன்னைக்)  கட்டுப்படுத்துகின்ற  பாகன்  கையிலுள்ள
அங்குசமானது  நிமிர்ந்து  விடும்படி;  கால்பிடித்து  ஓடி - (மதத்தின்
மணம்  வந்த)  வழியைப் பற்றிக் கொண்டு ஓடிப்போய்; பூத்த ஏழிலப்
பாலையை   -   (மதமணம்   வருவதற்குக்   காரணமான)  பூத்துள்ள
ஏழிலைப் பாலை  மரத்தை;   பொடிப்   பொடி   ஆக -  சிறுசிறு
தூள்களாகுமாறு; காத்திரங்களால்- முன்னங்கால்களால்; தலத்தொடும்
தேய்த்தது - தரையோடு தேய்த்துவிட்டது. 

சேனை     தங்கிய  சந்திர சயிலத்தின் சாரலில். ஏழிலைப் பாலை
மரத்திலிருந்து  யானையின்  மதமணம்  போன்ற மணம் வீச. யானைக்
கூட்டத்திலிருந்த  யானைகளில்  ஒன்று  மோப்பத்தால் அதையுணர்ந்து
மதவெறியால்   பாகனுக்கு   அடங்காமல்   அங்குசமும்   நிமிர்ந்திட
மதமணம்  வந்த  வழியை நாடிச்  சென்று  அங்குள்ள ஏழிலைப்பாலை
மரத்தைப்   பொடிபொடியாக   ஆகுமாறு   தன்  முன்னங்கால்களால்
தேய்த்தது என்றார். ஏழிலைப் பாலை: ஏழு  நிரையாக அடுக்கிய நீண்ட
இலைகளையுடைய  பாலை என்பார்  பரிமேலழகர் (பரிபா. 21-13) ‘சப்த
பர்ணீ’ என்று இதனை வடமொழியில் குறிப்பர்.                  6