வரைக்காட்சிப் படலம் - 905

bookmark

தேரின் வருணனை

கருங்கல்லைப் பொன்னாக்கிய தேர்கள்

905.

‘தெருண்ட மேலவர் சிறியவர்ச்
   சேரினும். அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்’
   எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும். பொன் உருள்
   உரைத்து உரைத்து ஓடி.
இருண்ட கல்லையும் தன் நிறம்
   ஆக்கிய - இரதம்.
 
தெருண்ட  மேலவர் - தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர்
சேரினும் -  சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட
அவர்தம்  -  அறிவுத்   தெளிவில்லாமல்  மயங்கிய  அவர்களுடைய;
புன்மையை  - இழி குணத்தை; மாற்றுவர் எனும் - போக்குவர் என்று
சொல்லுகின்ற;  இது  -  இந்த வார்த்தை; வழக்கே - முறைமையானதே
(உலக  இயல்பு);  இரதம்  -  (ஏனெனில்)  இரதங்கள்; பொன் உருள்
உருண்ட - பொன்னால்   இயன்ற   சக்கரங்கள்   உருண்டு   சென்ற;
வாய்தொறும்   -   இடங்கள்தோறும்;   உரைத்து   உரைத்து  ஓடி
- (தம்)  பொன்னை  உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட
கல்லையும்  - கருமையான  பாறாங்கற்களையும்; தம் நிறம் ஆக்கிய-
(தம்) பொன்னிறமாகவே செய்யலாயின. 

வேற்றுப்     பொருள்   வைப்பணி.  தேரின்  பொன்னிற உருளை
சென்றதால்   அங்குள்ள   பாறைகள்   பொன்னிறத்தை   அடைந்தன
என்பது. சேரினும் - எதிர்மறையும்மை.                         8