வரைக்காட்சிப் படலம் - 909
மகளிர் குடில்களிற் புகுதல்
909.
பிடி புக்கு ஆயிடை. மின்னொடும்
பிறங்கிய மேகம்
படி புக்காலெனப் படிதர.
பரிபுரம் புலம்ப.
துடி புக்கா இடைத் திருமகள்
தாமரை துறந்து
குடிபுக்காலென. குடில் புக்கார் -
கொடி அன்ன மடவார்.
மின்னொடும் பிறங்கிய- மின்னல்களோடு விளங்கிய; மேகங்கள் -
மேகங்கள்; ஆ இடை - அந்தச் சந்திர சயில மலைப் பக்கத்தில்; படி
புக்காலென - பூமியில் சேர்ந்தாற் போல; பிடி புக்குப் படிதர -
பெண்யானைகள் படிந்து நிற்க (அவற்றின் மேல் ஏறியிருந்த); கொடி
அன்ன மடவார் - பூங்கொடி போன்ற மகளிர்; துடி புக்கா இடை -
உடுக்கையை உவமையாகக் கூறப்பெறும் வெல்லும் இடை உடைய;
திருமகள் தாமரை துறந்து - இலக்குமி தாமரை மலரை விட்டு; குடி
புக்கால் என - (அங்கே) குடி புகுந்தாற் போல; பரிபுரம் புலம்ப -
(தம் கால்களின்) பாதச் சிலம்புகள் ஒலிக்கவும் (நடந்து); குடிபுக்கார் -
(தத்தம் விடுதிகளில்) குடி புகுந்தார்கள்.
பெண் யானைகளின் மேல் ஏறிவந்த சில பெண்கள் அவை பூமியில்
படிந்திருக்க. அவற்றிலிருந்து இறங்கிச் சென்று ஒரு சூழலில்
குடிபுகுந்தனர் என்பது. மகளிரைத் தாங்கிய பெண்யானைகளுக்கு
மின்னலைத் தாங்கிய மேகங்கள் உவமை. 12
