வரைக்காட்சிப் படலம் - 918

bookmark

கட்டை யறுத்துச் சென்ற குதிரைகள்

918.

மும்மை புரி வன் கயிறு
   கொய்து. செயல் மொய்ம்பால்
தம்மையும் உணர்ந்து. தரை
   கண்டு. விரைகின்ற.
அம்மையினொடு இம்மையை
   அறிந்து நெறி செல்லும்
செம்யைவர் என்ன. நனி
   சென்றன - துரங்கம்.
 
மும்மை     புரி -  மூவகையாக (மண். பொன். பெண் ஆசைகள்)
அமைந்த;  வல்கயிறு  -  வலிய பிணிப்புக்களை; கொய்து - அறுத்து;
செயல்  மொய்ம்பால்  -  (தாம்)   செய்யும் யோகத்தின் வலிமையால்;
தம்மை  உணர்ந்து  -   தமது ஆன்மாவின் உண்மை நிலை (ஆன்மா
மலம்    அற்றது;   ஞான    ஆனந்த   மயமானது;   கடவுளுக்கு
அடிமையானது) தெரிந்து; தரை கண்டு- (அதனோடு நில்லாமல்) தாம்
அடைய   வேண்டிய    பரம்   பொருளின்  நிலையையும்  உணர்ந்து;
விரைகின்ற   -   (அதனை  அடையுமாறு)  விரைந்து   செல்லுகின்ற;
இம்மையை  அம்மையினொடு  அறிந்து  -  இவ்  உலகப்  பயனை
மறுமைப்   பயனோடு  உணர்ந்து;  நெறி  செல்லும்  -  நன்னெறியே
செல்லுகின்ற;  செம்மையவர்  என்ன  - நற்குணமுடைய யோகியரைப்
போல;  துரங்கம்  - குதிரைகள்; மும்மை புரி வன் கயிறு - (தம்மை
கட்டிய)  முப்புரியாக அமைந்த  வலிய கயிற்றை;  கொய்து - அறுத்துக்
கொண்டு;  செயல்  மொய்ம்பால்  - (பாகனது) செயல் வல்லமையால்;
தம்மையும்   உணர்ந்து - தாம் செய்ய வேண்டியன இன்னவை என்று
அறிந்து;  தரை  கண்டு  - நிலத்தின் இயல்பு அறிந்து; விரைகின்ற -
விரைவாகச்  செல்லுகின்றனவாகி;  நனி  சென்றன  -  மிக ஒழுங்காக
வந்தன. 

ஞான  யோகியர் பரகதி அடைதற்குரிய நெறியில் விரைந்து செல்லும்
முறை  போன்று   இருந்தது  குதிரைகளின் ஒழுங்கான செலவு என்பது.
உத்த  ஆன்மா   அறிவதற்குரிய   ஐவகை  நிலைகளாவன  1. வினைத்
தடையாகிய விரோதி  நிலை; 2.  அத்தடையை நீக்கும் உபாய நிலை; 3.
அந்த  உபாயத்தை   மேற்கொள்ளும்  ஆன்ம   நிலை; 4. அது நாடும்
பரமான்ம நிலை; 5. வீடுபேறு.  இவற்றையே  ‘அர்த்த பஞ்சகம்’ என்பர்.
தரை  கண்டு:  பரம்பொருள்  தங்கும்  தானம்.  மும்மை புரி வன்கயிறு:
முப்புரியாக  அமைந்த  திண்ணிய  கயிறு; ஆணவம்.  கன்மம்.  மாயை
என்ற    மும்மலங்கள்   -   சிலேடை.    சிலேடை   மூலமாக  வந்த
உவமையணி.                                               21