கார்முகப் படலம் - 750
சனகனின் விருப்பம்
750.
‘மாற்றம் யாது உரைப்பது?
மாய விற்கு நான்
தோற்றனென் என
மனம் துளங்குகின்றதால்;
நோற்றனள் நங்கையும்;
நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல். இடர்க் கடல்
ஏற்றும்’ என்றனன்.
(சனகன் விசுவாமித்திரனை (நோக்கி) மாற்றம் யாது- உமது
வார்த்தைக்கு மாற்றமாக என்ன; நான் உரைப்பது - நான் சொல்ல
இருக்கின்றது; மாய விற்கு - வஞ்சனையமைந்த இந்த வில்லை;
கன்னியின் திருமணத்திற்கு காரணமாக வைத்தால்; மனம் - (எனது)
விருப்பம்; தோற்றனென் என - தோற்றுவிட்ட தன்மையை
எண்ணும்போது; துளங்குகின்றது-மிகக் கலங்குகின்றது; ஐயன்- வியத்
தகு பண்புகளையுடைய இக்குமாரன்; நொய்தின் - விரைவாக; வில்
ஏற்றுமேல் - சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றுவானேயானால்;
இடர்க்கடல் ஏற்றும் - (என்னையும்) துயரக் கடலிலிருந்து
கரையேற்றினவனாவான்; நங்கையும் - என் மகளான சீதையும்;
நோற்றனள் - (முன் செய்த) தவப்பேற்றைப் பெற்றவளாவாள்;
என்றனன் - என்று கூறினான்.
‘முனிவரே! இம் மைந்தரின் குலவரலாற்றோடு தோள்வலிமையையும்
கூறினீர். உமது வார்த்தைக்கு மறமாற்றம் சொல்வேனோ? ஆனால்
பெண்ணின் திருமணத்தின் பொருட்டு வைத்த இந்த வில்லை
இதுவரை எந்த வீரரும் வளைத்து நாணேற்றினாரில்லை;அதனால்
என் மகள் திருமணமும் நடைபெறாமல் என் மனம் கலங்கியுள்ளது.
இச் சிவ தனுசை இச் சிறுவன் நாணேற்றினால் என் துன்பமும்
நீங்கும்; இச் சீதையும் தவப் பேற்றைப் பெற்றவளாவாள் என்றான்.
எவராலும் வளைக்கமுடியாமல் இருந்ததால் இதனை ‘மாயவில்’
என்றார். 1
