கார்முகப் படலம் - 755

bookmark

755.    

‘கைதவம். தனு எனல்;
   கனகக் குன்று’ என்பார்;
‘செய்தது. அத் திசைமுன்
   தீண்டி அன்று; தன்
மொய் தவப் பெருமையின்
   முயற்சியால்’ என்பார்;
‘எய்தவன் யாவனோ.
   ஏற்றிப் பண்டு?’ என்பார்.
 
தனு  எனல்  - வில்லென்று   சொல்லுதல்;   கைதவம் - வஞ்சக்
சொல்லே;  கனக்  குன்று  -  (இது)  பொன்மலையான  மேருவாகும்;
என்பார்  -  என்று  கூறுபவர்களும்;  அத்  திசைமுகன்  - பிரமன்;
செய்தது  -  (இதனை)  இயற்றியது;  தீண்டி  அன்று - (தன்கையால்)
தொட்டுப்   பார்த்து   இல்லை;  (பின்  எவ்வாறு  இயற்றியது);  தன்
மொய்தவம்  -  தனது  நிறைந்த  பெரிய  தவத்தின்;  பெருமையின்
முயற்சியால் - பெருமையால்; என்பார் - என்பாரும் ஆயினர்; பண்டு
ஏற்றி  எய்தவன்  -  முற்காலத்தில்  நாண் ஏற்றி (இதனை) எய்தவன்;
யாவனோ என்பார் - எவனோ என்று கூறுபவர்களும்.

சிவ     தனுசிடம் அத்தன்மையை  மறுத்து  மேருவின் தன்மையை
ஏற்றிக்  கூறியது  -  அவநுதியணி.  இத்துணைப்  பெரிய   வில்லைப்
பிரமன்    தன்   கையால்   இயற்றவில்லை;    தன்   தவலிமையால்
இயற்றினான்.                                               6