கார்முகப் படலம் - 760

bookmark

சதானந்த முனிவன் வில்லின் வரலாறு உரைத்தல்
 
760.

போதகம் அனையவன்
   பொலிவை நோக்கி. அவ்
வேதனை தருகின்ற
   வில்லை நோக்கி. தன்
மாதினை நோக்குவான். தன்
   மனத்தை நோக்கிய
கோதமன் காதலன்
   கூறல் மேறினான்;
 
போதகம்    அனையவன்  - யானைக்   கன்றை யொத்தவனாகிய
இராமனது; பொலிவு நோக்கி- அழகைக் கண்டு; வேதனை தருகின்ற-
(அவனுக்குத்  தன் மகளைத் திருமணம் செய்விக்க   விரும்பி)  துன்பம்
தருகின்ற; அவ் வில்லை நோக்கி - (தனது விருப்பத்திற்கு இடையூறாக
உள்ள)  அந்த  வில்லின்   தன்மையையும்  பார்த்து;  தன்  மாதினை
நோக்குவான்  - (இந்த வில் மணமுடிக்கத் தடையாக உள்ளதே;இவள்
கன்னியாகவே மூப்பாளோ என்ற மனக் கவலையோடு)  தன்   மகளைப்
பார்க்கின்ற  சனகனது;  மனத்தை  -  மனக்  கலக்கத்தை; நோகிய -
உணர்ந்த;  கோதமன்  காதலன் - கௌதமன் மகனாகிய சதானந்தன்;
கூறல் மேயினான் - சொல்லத் தொடங்கினான்.

போதகம்:   இள வயதுடைய யானைக் கன்று. வில்லின் வரலாற்றைச்
சனகராசன்  கூறுவதாக  முதனூலில்  உள்ளது.  இங்கே    சதானந்தன்
உரைப்பதாக  அமைத்துள்ளார்.  தன்  மாதினை  நோக்குவான்  மனம்
என்றது தன் அருமைப் பெண் கன்னியாகவே  மூத்துக்  கழிய நேருமோ
என்ற மனக் கவலையைக் குறிக்கும்.                            11