சாலை இளந்திரையன்
ஆரம்ப வாழ்க்கை:
பள்ளிக் கல்வி
சாலை இளந்திரையன் என்னும் வ. இரா. மகாலிங்கம் 1936 முதல் 1941 வரை களக்காட்டில் உள்ள தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் 1941 முதல் 1944 வரை டோணாவூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதற் படிவம் (ஆறாம் வகுப்பு) முதல் மூன்றாம் படிவம் (எட்டாம் வகுப்பு) வரை பயின்றார். நான்காம் படிவம் (ஒன்பதாம் வகுப்பு) முதல் ஆறாம் படிவம் (பதினொன்றாம் வகுப்பு) வரை பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் 1944 முதல் 1947 வரை பயின்றார்.
கல்லூரிக் கல்வி
1948 முதல் 1950 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்றார். அங்கு பேராசிரியர் மு. வரதராசன், அ. மு. பரமசிவானந்தம், அ. ச. ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்களிடம் பயின்றார்.
1950 முதல் 1952 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும், அதே கல்லூரியில் 1952 முதல் 1954 வரை பயின்று கலை முதுவர் பட்டமும் பெற்றார். அப்பொழுது புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான சரவண ஆறுமுகன், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார்.
ஆய்வுக் கல்வி
1954 சூலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன் முறையாக இலக்கிய முதுவர் பட்டத்திற்கான ஆய்வு வகுப்பு தொடங்கப்பட்டது. அவ்வகுப்பில் 1954 – 55ஆம் கல்வி ஆண்டில் முதல் மாணவராகச் சேர்ந்து, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரை நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்து அப்பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுப் பழமொழிகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.
அவரின் பணிகள் :
கல்லூரியில் அவரின் பயணம்
1954 சூலை முதல் 1957 ஏப்ரல் வரை சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறையில் ஆசிரியர் பணியிடம் ஒன்று தற்காலிகமாக ஏற்பட்டது. சாலை இளந்திரையன் அப்பணியில் அமர்த்தப்பட்டார்.
அரசு அலுவலகத்தில்
1957 ஆம் ஆண்டின் நடுவில் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர, தகவல் ஒலிபரப்புத் துறையில் மொழிபெயர்ப்பாளாரக பணியாற்றத் தொடங்கினார்.
பல்கலைக் கழகத்தில்
1959 ஆம் ஆண்டில் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டதும் சாலை இளந்திரையன் அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972 ஆம் ஆண்டில் பேருரையாளராகவும் 1983 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். 1985 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்று தமிழகம் திரும்பினார்.
ஓய்விற்குப் பின்னர் செய்த பணி:
பின்னர் சென்னையில் சாலை அச்சகத்தை உருவாக்கி நடத்தினார்.
புனைபெயர்:
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற காலத்தில் வ. இரா. மகாலிங்கம் அந்நாளில் புகழ்பெற்ற இதழ்களான பிரசண்ட விகடன், தமிழ்ப் பொழில் உள்ளிட்ட பல இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதத் தொடங்கினார். அப்பொழுது மாணவர்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த திராவிட இயக்கக் கருத்தியலுக்கு மகாலிங்கமும் ஆட்பட்டிருந்தார். எனவே அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைபெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரைத் தன்னுடைய புனைபெயராகக் கொண்டு இரா. இளந்திரையன் என்னும் பெயரில் படைப்புகளை ஆக்கினார். பின்னாளில் தன்னுடைய ஊர்ப்பெயரின் முதற்பகுதி தனது புனைபெயருக்கு முன்னே இணைத்துச் சாலை இளந்திரையன் ஆனார்.
இதழ் பணிகள்:
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுடர் என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. இவ்விதழின் ஆசிரியராக 1960 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை சாலை இளந்திரையன் பணியாற்றினார்.
1975 அக்டோபர் முதல் 1987 ஏப்ரல் வரை அறிவியக்கம் என்னும் இதழும் 17 மே முதல் 1993 ஏப்ரல் வரை வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழும் அறிவியக்கப் பேரவையின் சார்பில் வெளியிடப்பட்டன. சாலை இளந்திரையன் அவ்விதழ்களின் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார்.
அமைப்பாக்கப் பணிகள்:
உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
1964 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள கீழ்க்கலை ஆராய்ச்சி மையம் தனது 26 ஆவது மாநாட்டைக் கூட்டியது. அதிற் கலந்துகொள்வதற்காகத் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும் உலகின் பல பகுதிகளிலிருந்து அம்மாநாட்டிற்கு வருகை தந்தனர். அவர்களோடு சாலை இளந்திரையனும் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினர். இக்கழகமே உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துகிறது.
இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம்
1968 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்கு அவர் தம் ஆய்வுரைகளை நிகழ்த்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே ஆண்டுதோறும் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் தம்முடைய ஆய்வுகளை வெளியிடுவதற்காக இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கச் சாலை இளந்திரையன் உந்துசக்தியாக இருந்தார்.
அறிவியக்கப் பேரவை
1971 ஆம் ஆண்டில் குத்தூசி குருசாமியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த நாத்திக நந்தனார், மணிமார்பன் உள்ளிட்டோரின் உதவியோடு அறிவியக்கப் பேரவை என்னும் அமைப்பைச் சாலை இளந்திரையன் உருவாக்கினார். அவ்வியக்கத்தின் வழியாகவே 1986ஆம் ஆண்டு வரை தம்முடைய சமூக - அரசியற் செயற்பாடுகளை வெளிப்படுத்தினார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது அங்கு கூடிய தமிழறிஞர்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினர். அப்பணியில் சாலை இளந்திரையன் முக்கியப் பணியாற்றினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்
1980 ஆம் ஆண்டில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவத் தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காகப் பேராசிரியர் முனைவர் வ. சுப. மாணிக்கம் தலைமையில் சாலை இளந்திரையன் உள்ளிட்ட எண்மரைக்கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வரைவுத் திட்டம் ஒன்றை சாலை இளந்திரையன் சமர்பித்தார். அதனைச் சிற்சில மாற்றங்களுடன் வல்லுநர் குழு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையிலேயே தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
சமூக,அரசியற் செயற்பாட்டுப் பணிகள்:
விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1944-47 ஆம் ஆண்டுகளில் பள்ளி மாணவராக இருந்த சாலை இளந்திரையன் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராகக் கதராடை அணிந்து இயங்கினார்.
1948 ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபொழுது திராவிட இயக்கக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு இயங்கினார். அதன் பின்னர் தன்னுடைய இறுதிநாள் வரை திராவிடத் தந்தை ஈ. வெ. ராமசாமி பெரியாரின் அரசியற் கொள்கைகளையும் பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியக் கொள்கையையும் சாலை இளந்திரையன் பின்பற்றி வந்தார். பொதுவுடைமைத் தமிழ்தேசியத்தை தன்னுடைய சமூக அரசியற் கொள்கையாகக் கொண்டு அறிவியக்கப் பேரவையை உருவாக்கித் தனது செயற்பாடுகளை மேற்கொண்டார். தன்மான வாழ்வியல், இந்திய தேசிய மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஈழவிடுதலை ஆதரவு, தமிழர் தன்னுரிமை ஏற்பு, நக்சலிய ஆதரவு ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் உரைகளை, படைப்புகளை, அறிக்கைகளை, கடிதங்களைச் சாலை இளந்திரையன் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
1991 ஆம் ஆண்டில் பழ. நெடுமாறன் தடையை மீறித் தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். அம்மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு வந்தால் கைதாவோமென அறிந்தே அங்கு வந்து சாலையர் இருவரும் கைதாயினர். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் நூலை எழுதியதற்காக இவர்மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.
மறைவு:
சாலை இளந்திரையன் நெஞ்சக நோயால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் 4. 10. 1998 ஆம் நாள் மரணமடைந்தார். அவரது விருப்பப்படியே அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்காக அளிக்கப்பட்டது.
