தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

bookmark


சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
  துஞ்சிடோ ம் - இனி - அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
  ஏற்குமோ? - தெய்வம் - பார்க்குமோ?    1

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
  வாழ்த்துவோம்; - முடி - தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
  ஈனமோ? - அவ மானமோ?    2

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
  போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
  அல்லமோ? - உயிர் வெல்லமோ?    3

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
  நாய்களோ? - பன்றிச் - சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இது
  நீதமோ? - பிடி - வாதமோ?    4

பார தத்திடை அன்பு செலுத்துதல்
  பாபமோ? - மனஸ் - தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
  குற்றமோ? - இதில் - செற்றமோ?    5

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
  ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோம்;
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
  மலைவு றோம்; - சித்தம் - கலைவுறோம்.    6

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
  சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
  ஏகுமோ? - நெஞ்சம் - வேகுமோ?    7