மிதிலைக் காட்சிப் படலம் - 625
அந்திமாலை வருணனை (625-626)
625.
விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்.
எரி நிறச் செக்கரும். இருளும். காட்டலால்.
அரியவட்கு அனல் தரும் அந்திமாலையும்
கரு நிறச் செம் மயிர்க் காலன் தோன்றினான்.
விரிமலர்த் தென்றலாம்- மலர்ந்த பூக்களின் படிந்து வரும்
தென்றலாகிய; வீசு பாசமும் - வீசிப் பிணிக்கும் பாசாயுதமும்;
எரிநிறச் செக்கரும் - தீயைப் போன்ற நிறமுடைய செவ்வானமாகிய
செம்பட்டை மயிரும்; இருளும் - இருளாகிய கரிய நிறத்தையும்;
காட்டலால் - தன்னிடத்தே தோன்றக் காண்பித்தலாலே; அரியவட்கு
- அருமையானவளாகிய சீதைக்கு; அனல் தரும் - காமத்
தீயை வளர்க்கின்ற; அந்தி மாலை ஆம் - அந்திக் காலம்
என்கின்ற; கருநிறம் - கரிய நிறமும்; செம் மயிர் - சிவந்த
மயிர்களையும் உடைய; காலன் தோன்றினான் - இயமன் வந்தான்.
சீதை காமவேதனையால் வருந்தும்பொழுது அதை மேலும்
வளர்க்கும். அந்திப்பொழுது வந்தது; அது அவளுக்கு இயமன் வந்து
தோன்றியதுபோல இருந்தது. என்றார். செக்கர்: செவ்வானம் -
பண்பாகுபெயர். அரியவள்: பிற பெண்களிடம் காணப்பெறாத
அருமையான பண்புகளையுடையவள். 62
