மிதிலைக் காட்சிப் படலம் - 631
அன்றிற்பறவையை நோக்கி இரங்கியது
631.
‘வெளி நின்றவரோ போய் மறைந்தார்;
விலக்க ஒருவர்தமைக் காணேன்;
‘’எளியன். பெண்’’ என்று இரங்காதே.
எல்லியமாத்து இருளூடே.
ஒளி அம்பு எய்யும் மன்மதனார்.
உனக்குஇம் மாயம் உரைத்தாரோ?
அளியென் செய்த தீவினையோ!
அன்றில் ஆகி வந்தாயோ?
(ஓ பறவையே) வெளிநின்றவரோ- (என் கண்முன் சிறிது நேரம்)
வெளிப்பட்டுத் தோன்றிய தலைவரோ; போய் மறைந்தார்
- (இப்பொழுது) மறைந்து சென்றார்; விலக்க - (அவ்வாறு போகும்
அவைரப் போக விடாமல்) டுப்பதற்கு; ஒருவர்தமைக் காணேன் -
ஒருவரையும் (நான்) காணவில்லை; எளியள் பெண் என்று -
(இப்படிக் கதியற்ற) எளிமையுள்ள பெண் என்று கருதி்; இரங்காதே
- (சிறிதும்) இரக்கம் கொள்ளாமல்; எல்லியாமத்து- இரவுக் காலத்தின்;
இருள் ஊடே - இருளிடையே; ஒளி அம்பு எய்யும் - ஒளிந்து
நின்று அம்புகளை (என்மேல்) எய்யும்; மன்மதனார் - காமதேவன்;
உனக்கு இம் மாயம் - உனக்கு இந்த வஞ்சகச் செயலை;
உரைத்தாரோ - சொல்லிக் கொடுத்தானோ?; அளியென் செய்த -
(அல்லாது) எளியவள் முற்பிறப்பில் செய்த; தீவினையோ - பாவமோ;
அன்றில் ஆகி (இந்தப் பிறப்பில்) அன்றில் உருவங்கொண்டு்;
வந்தாயோ - (என்னை) வருத்த வந்தாயோ?
அன்றில் - இப்பறவை இனத்தில் ஆணும் பெண்ணும்
எப்பொழுதும் கூடிய இருக்கும். இது இரவில் துணையைப் பிரிந்தால்
வருந்தும். அந்த நலிவால் கூவுகின்ற குரலோசை தலைவரைப் பிரிந்து
வருந்துகின்ற மகளிர்க்கு அவ் வருத்தத்தை வளர்ப்பதாகக் கூறுதல்
கவி மரபு. இம் மாயம்: இருளில் நின்று எனக்குத் தீங்கு இழைக்கும்
வித்தை. கொடுமை. யாமம்: ஏழரை நாழிகை - இங்குப் பொழுது என்ற
பொருளில் வந்தது. 68
