வேலன்பாட்டு

வேலன்பாட்டு

bookmark


ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம் 

வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை 
  வேலவா! - அங்கோ 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
  யானது வேலவா! 
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு 
  வள்ளியைக் - கண்டு 
சொக்கி மரமென நின்றனை 
  தென்மலைக் காட்டிலே 
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட 
  பாதகன் - சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
  கிரையிட்ட வேலவா! 
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் 
  வள்ளியை - ஒரு 
பார்ப்பனக் கோலம் தரித்துக் 
  கரந்தொட்ட வேலவா! 

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங் 
  கடலினை - உடல்வெம்பி மறுகிக் கருகிப் 
  புகைய வெருட்டினாய். 
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் 
  செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப 
விளக்கை மருவினாய். 
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
  குலைத்தவன் - பானு 
கோபன் தலைபத்துக் கோடி 
  துணுக்குறக் கோபித்தாய் 
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன் 
  மானைப்போல் - தினைத் 
தோட்டத்தி லேயொரு பெண்ணை 
  மணங்கொண்ட வேலவா! 

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப 
  மாகுதே, - கையில் 
அஞ்ச லெனுங்குறி கண்டு 
  மகிழ்ச்சியுண் டாகுதே. 
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
  யாவையும் © இங்கு 
நீங்கி அடியரை நித்தமுங் 
  காத்திடும் வேலவா! 

கூறு படப்பல கோடி யவுணரின் 
  கூட்டத்தைக் - கண்டு 
கொக்கரித் தண்டங் குலுஙக 
  நகைத்திடுஞ் சேவலாய் 
மாறு படப்பல வேறு வடிவொடு 
  தோன்றுவாள் - எங்கள் 
வைரவி பெற்ற பெருங்கன 
  லே, வடி வேலவா!