பலவகைத் - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

910

நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு

நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு

படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்

தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்

பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே.

6.93.1

911

ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே

அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு

மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்

படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்

நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே.

6.93.2

912

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்

புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று

களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்

நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீ ராகில்

அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.

6.93.3

913

இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்

ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்

களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்

அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீ ராகிற்

பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

6.93.4

914

ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம்

மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்

வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்

துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.

6.93.5

915

கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்

கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்

நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய

அருமறையோ டாறங்க மானார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்

வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.

6.93.6

916

தண்டி குண்டோ தரன்பிங் கிருடி

சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் றானும்

பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்

சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்

கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

6.93.7

917

விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே

வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று

மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்

பங்கயத்து மேலயனும் பரவிக் காணா
குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்

கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.

6.93.8

918

தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்

தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்

கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று

எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்

வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.

6.93.9

919

தந்தையார் தாயா ருடன் பிறந்தார்

தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ

மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்

திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய

என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.

6.93.10

திருச்சிற்றம்பலம்