நின்ற - திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

920

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்

பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி

நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

6.94.1

921

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி

வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்

கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்

பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி

எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

6.94.2

922

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்

காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்

புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்

சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி

நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

6.94.3

923

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்

கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்

குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி

நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி

எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

6.94.4

924

தீயாகி நீராகித் திண்மை யாகித்

திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்

தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற

இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி

நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

6.94.5

925

அங்கமா யாதியாய் வேத மாகி

அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்

பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்

கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி

எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

6.94.6

926

மாதா பிதாவாகி மக்க ளாகி

மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்

கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

6.94.7

927

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி

அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி

நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்

பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்

செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

6.94.8

928

நீராகி நீளகலந் தானே யாகி

நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்

பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்

ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்

பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

6.94.9

929

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்

மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்

பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்

பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி
ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்

எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

6.94.10

திருச்சிற்றம்பலம்