மிதிலைக் காட்சிப் படலம் - 620

bookmark

620.

‘படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்.
தடந் தரு தாமரைத் தாளுமே. அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்.
நடந்தது. கிடந்தது. என் உள்ளம் நண்ணியே.
 
படர்ந்து   ஒளிபரந்து- அகன்ற ஒளி பரந்து; உயிர்  பருகும் -
காண்போர்  உயிரைப்   பருகக்   கூடிய  ;  ஆகமும்  -   அவனது
திருமார்பும்;  தடம்  தரு  -  பெருமை  மிக்க; தாமரைத்  தாளுமே
- செந்தாமரை  போன்ற  திருவடிகளும் என்னும்; அல  -   இவையே
அல்ல;  கடம்தரு   மாமதம்  -  கன்னத்திலிருந்து   வழியும்  மிக்க
மதநீரையும்; களி நல்யானை  போல் - களிப்பையும்  உடைய சிறந்த
ஆண் யானை  போல;  நடந்தது - (அந்த இளைஞன்)  நடந்துசென்ற
நடையழகு; என் உள்ளம்  நண்ணி  -  என்  மனத்தில்   பொருந்தி;
கிடந்தது - (எப்பொழுதும் நீங்காது) பதிந்துள்ளது.   

சீதை  இராமனது மார்பின் அழகு. தாமரைத் திருவடிகளின் அழகு
என்ற இவற்றைவிட அவனது நடையழகில் தன் மனம்  பதிந்தமையைத்
தெரிவிக்கின்றாள்.     தடம் தரு தாமரை: தடாகத்தில்  பூத்த தாமரை
என்றும்  கூறலாம். பறிக்கப்பட்டு வாடிப் போகாத அன்று  பூத்த மலர்
எனலாம்.                                               58