மிதிலைக் காட்சிப் படலம் - 630

bookmark

இருளைநோக்கிப் புலம்பல்

630.

‘ஆலம் உலகில் பரந்ததுவோ?
   ஆழி கிளர்ந்ததே? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும்
   நினைக்க. அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில்
   கலந்து குழைத்து. காயத்தின்
மேலும் நிலத்தும். மெழுகியதோ?-
   விளைக்கும் இருளாய் விளைந்ததுவே!
 
விளைக்கும்    - (துன்பம்) உண்டாக்குகின்ற; இருளாய் - இருள்
உருவமாய்; விளைந்தது - முதிர்ச்சி அடைந்துள்ளது; ஆலம் உலகில்
-  ஆலகால நஞ்சு  உலகெங்கும்;  பரந்ததுவோ - பரவியதுதானோ?;
ஆழி  கிளர்ந்ததோ - கருங்கடல் மேலே பொங்கி எழுந்ததுதானோ?;
அவர்தம்  நீல  நிறத்தை -  அந்த உத்தமனது திருமேனியின்  நீல
நிறத்தை; எல்லோரும்  நினைக்க - (உலகில்) யாவரும்  நினைத்தால்;
அதுவாய்   நிரம்பியதோ     -     எங்கும்    அந்நிறமே ஆகி
வியாபித்ததுதானோ?; காலன் நிறத்தை  -  இயமனது   கருநிறத்தை;
அஞ்சனத்தில் கலந்து - மையோடு  கலந்து; குழைத்து -  குழைத்து
(அதனை);  காயத்தின்  மேலும்  -  வானத்தின் மேலும்; நிலத்தும்
- பூமியின் மீதும்; மெழுகியதோ - (முழுவதும்) பூசியதுதானோ?   

காயம்:  ஆகாயம். முதற்குறை: அணி: தற்குறிப்பேற்றவணி. ஆலம்.
காலன்  நிறம்;  யாவர்க்கும்  அச்சம் ஊட்டுவன. ஆழி: பிரிந்தார்க்கு
வருத்தம் ஊட்டுவது.                                      67