வரைக்காட்சிப் படலம் - 898

bookmark

வேழங்களினின்றும் மகளிர் இறங்க அவை
பிணிக்கப்படல்

898.

கோலை ஆர் வடக் கொழுங் குவடு
   ஒடிதர நிவந்த.
ஆவி வேட்டன. வரி சிலை
   அனங்கன் மேல் கொண்ட.
பூவை வாய்ச்சியர் முலை சிலர்
   புயத்தொடும் பூட்ட.
தேவதாரத்தும். சந்தினும்.
   பூட்டின - சில மா.
 
கோவை     ஆர்   -    முத்துவடம்    முதலியன     நிரம்ப
அணைந்துள்ளனவும்; வட கொழுங்குவடு - வடதிசையிலுள்ள செழித்த
மேருமலையும்; ஒடிதர - தோற்கும்படி?; நிவந்த  - உயர்ந்துள்ளனவும்;
ஆவிவேட்டன  -  (தம் காதலரான) ஆடவரின் உயிரை(க் கொள்ளை
கொள்ள)  விரும்பியனவும்;  வரிசிலை அனங்கன்மேல் - கட்டமைந்த
வில்லையுடைய   மன்மதனால்   தன்  தொழிலுக்குக்  (காம  வேட்கை
எழுப்பவும்); கொண்ட -ஆடவர் கருவியாகக் கொண்ட; முலைகளை -
(தம்)  கொங்கைகளை;  பூவை  வாய்ச்சியர் - நாகணவாய்ப் புள்ளைப்
போலஇனிய சொற்கள் பேசும்  மகளிர்; சிலர்  புயத்தொடும் பூட்ட-
ஆடவர் சிலரின்  புயங்களோடு  அணைக்க;  கோவை ஆர் வடம் -
வானத்தையளாவிய  ஆலமரத்தின்; கொழுங் குவடு ஒடிதர - செழித்த
கிளைகள்  ஒடியும்படி;  நிவந்த  -  ஓங்கியனவும்;  ஆவிவேட்டன -
(தண்ணீர்  பருக) தடாகத்தை விரும்பியனவும்; வரிசிலை அனங்கன் -
கட்டமைந்த   வில்லையுடைய    மன்மதனைப்    போன்ற   வீரனை;
மேல்கொண்ட  -  (தம்)  மேல் கொண்டிருப்பனவுமான; சிலமா - சில
யானைகள்;  தேவதாரத்தும்  - தேவதார  மரங்களிலும்;  சந்தினும் -
சந்தன மரங்களிலும்; பூட்டின - கட்டப்பட்டன. 

சந்திரசயில     மலையில் யானைகளின் மேல் இருந்த மகளிர். தம்
தனங்கள்  கணவரின்   தோள்களில்  படுமாறு அவரைத் தழுவியவாறு
கீழே   இறங்கினர்;   அந்த  யானைகள்   மரங்களில்  கட்டப்பட்டன.
சிலேடையணி  -  கொங்கைக்கும்  யானைக்கும்  சிலேடை. தேவதாரு.
சந்தனம்   என்ற    மரங்களில்    யானைகள்   பூட்டப்பட்டனபோல.
பெண்களால்    தனங்கள்  ஆண்களின்  தோள்களில்  பூட்டப்பட்டன
என்ற உவமை தொனிக்கிறது. 

தனங்களுக்கு யானைகளும். தோள்களுக்குக் கட்டுத்தறியாக உதவும்
மரங்களும்  உவமை.  தனங்கள்  தம்  காதலர்க்குக் காமவேதனையை
மிகுதியாக   உண்டாக்குவதால்  ‘அனங்கன்  மேற்கொண்ட’  என்றும்.
‘ஆவி வேட்டன’ என்றும் கூறினார். 

முலை  - ‘ஆவி வேட்டன’ - அகிற்புகையை விரும்பின; வரிசிலை
அனங்கன்மேல்     கொண்ட-கட்டமைந்த    கரும்பு    வில்லையும்
மன்மதனையும் தொய்யிலாக மேலே எழுதப்பெற்றன.             1