வரைக்காட்சிப் படலம் - 931
931.
மீன் எனும் பிடிகளோடும்
விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டிக்
குத்திட. குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றி.
செந் தினைக் குறவர். முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி.
ஐவனம் வளர்ப்பர் மாதோ!
மீன் எனும் பிடிகளோடும் - நட்சத்திரங்களாகிய (தன்) பெண்
யானைகளுடனே; விளங்கு வெண்மதி - விளங்கும் வெண்ணிறமுள்ள
சந்திரனாகிய;நல்வேழம் - சிறந்த யானை; கூன் நல் வான்கோடு -
வளைவும் அழகுள்ள வெண்கொம்புகளை; நீட்டிக் குத்திட - நீட்டிக்
குத்தியதனால் (அவற்றிலிருந்து); குமுறிப் பாயும் தேன் -
பேரொலியோடு பாய்கின்ற தேனினது; உகு மடையை மாற்றி -
பாய்கின்ற மடையைத் தடுத்து; செந்தினைக் குறவர் - செந்தினைக்
கொல்லைகளையுடைய மலைக் குறவர்கள்; முந்தி வானம் ஆறு -
விரைவாக ஆகாய கங்கையின்; நீர்பாய்ச்சி - நீரைப் பாயச் செய்து;
ஐவனம் வளர்ப்பர் - மலை நெல்லை வளரச் செய்வார்கள்.
தேன் வெள்ளத்தால் தினை விளைவதற்கு முன் அதனைத் தடுத்து
உலர்ந்த ஐவன நெல்லை ஆற்றுநீர் கொண்டு மலைக் குறவர் மாற்றி
விளைத்தனர் என்பது - தொடர்புயர்வு நவிற்சியணி. இவ்
வருணனையால் மலையின் ஓங்கிய தன்மையும். மலைவளனும்
பெறப்படும். 4
