திருவையாறு
 
                                                    பாடல் 887
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன ...... தனதான 
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல் 
சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி 
சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை 
துவர தோஇல வோதெரி யாஇடை 
துகளி லாவன மோபிடி யோநடை 
துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப் 
பரிவி னாலெனை யாளுக நானொரு 
பழுதி லானென வாணுத லாரொடு 
பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப் 
பரவை மீதழி யாவகை ஞானிகள் 
பரவு நீள்புக ழேயது வாமிகு 
பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே 
கரிய மேனிய னானிரை யாள்பவன் 
அரிய ராவணை மேல்வளர் மாமுகில் 
கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக் 
கபடன் மாமுடி யாறுட னாலுமொர் 
கணையி னால்நில மீதுற நூறிய 
கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே 
திரிபு ராதிகள் தூளெழ வானவர் 
திகழ வேமுனி யாவருள் கூர்பவர் 
தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே 
சிகர பூதர நீறுசெய் வேலவ 
திமிர மோகர வீரதி வாகர 
திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே. 
 

 
                                            