மங்கல வாழ்த்துப் பாடல்
புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர்.
