திருமுல்லைவாயில்
                                                    பண் - பியந்தைக்காந்தாரம்
952
துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
  நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
  உமைபங்க னெங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
  கமலங்கள் தங்கு மதுவின்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
  திருமுல்லை வாயி லிதுவே.    
01
953
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
  அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு
  மரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி
  யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்
  திருமுல்லை வாயி லிதுவே.    
02
954
வாராத நாடன் வருவார்தம் வில்லின்
  உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன்
  அருள்மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின்
  அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
  திருமுல்லை வாயி லிதுவே.    
03
955
ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
  இருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்
  அறியாமை நின்ற அரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று
  கொடியொன்றொ டொன்று குழுமிச்
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த
  திருமுல்லை வாயி லிதுவே.    
04
956
கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
  விடைநாளும் ஏறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
  மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
  அணிகோபு ரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு
  திருமுல்லை வாயி லிதுவே.    
05
957
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
  ஒளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன்
  அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
  குயிலேறு சோலை மருவி
தேனேறு மாவின் வளமேறி யாடு
  திருமுல்லை வாயி லிதுவே.    
06
958
நெஞ்சார நீடு நினைவாரை மூடு
  வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
  அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
  உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
  திருமுல்லை வாயி லிதுவே.    
07
959
வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்
  முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
  உமைபங்கன் எங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
  மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு
  திருமுல்லை வாயி லிதுவே.    
08
960
மேலோடி நீடு விளையாடல் மேவு
  விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
  யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
  கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
  திருமுல்லை வாயி லிதுவே.    
09
961
பனைமல்கு திண்கை மதமா வுரித்த
  பரமன்ன நம்ப னடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
  அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
  முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
  திருமுல்லை வாயி லிதுவே.    
10
962
அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
  அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
  திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
  மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
  அகல்வானம் ஆள்வர் மிகவே.    
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனநாதர், தேவியார் - அணிகொண்டகோதை
திருச்சிற்றம்பலம்
