இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

bookmark

புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவிற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக், கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன. அவ்வேளையில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிக்கின்றன. பிரிவுத்துயரால் கண்ணகிக்கும், ஆனந்த மிகுதியால் மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன.