அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை
மாலை நேரத்திலே, தம்முள் கூடினார் இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவுகடந்த வேதனையால், நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்கநிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும், காவலனின் வெண்கொற்றக் குடைபோல, முழுநிலவும் வானிலே விளங்கிற்று. வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப்பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும்.
